பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயிலை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. படம்: பிடிஐ
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவத்தினர் பயணம் செய்த ரயிலைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாக உதயமானபோது பலுசிஸ்தானும் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. கடந்த 1948 மார்ச் மாதம் பலுசிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தான் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ராணுவ பலத்தின் மூலம் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. இதில் சுமார் 2 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது முதல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து 1970-ம் ஆண்டில் பலுச் விடுதலைப் படை என்ற கிளர்ச்சிப் படை (பிஎல்ஏ) உருவானது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்த அமைப்பு தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள ராணுவ முகாமில் இருந்து நேற்று காலை சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. குவெட்டா ராணுவ முகாமில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சாமன் பதக் பகுதியில் ரயில் வந்தபோது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார், ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் 3 ரயில் பெட்டிகள் வெடித்துச் சிதறி உருக்குலைந்தன. பல பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களா என்பதை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்யவில்லை.
100 பேர் வரை உயிரிழப்பு?- ‘‘இந்த தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுகிறோம்’’ என்று குவெட்டா நகரின் மூத்த போலீஸ் அதிகாரி குவாதிர் கும்ரானி தெரிவித்துள்ளார்.
ரயில் தாக்குதலுக்கு பலுச் விடுதலைப் படை பொறுப்பேற்று உள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவெட்டா ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர்கள் சென்ற ரயிலைக் குறிவைத்து எங்களது தற்கொலைப்படை பிரிவு கார் குண்டு தாக்குதலை நடத்தியது. பொதுமக்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. ராணுவ வீரர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
குவெட்டா போலீஸார் கூறும்போது, “வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஒட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ரயில் மீது மோதி தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களும் உருக்குலைந்து உள்ளன’’ என்று தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் ஹனீப் அப்பாஸி, “இந்தியா, ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன’’ என்று குற்றம்சாட்டி உள்ளார்.
சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பலுச் விடுதலைப் படையின் (பிஎல்ஏ) பலம் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து பிஎல்ஏ சார்பில் 150 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து 65-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டா, மஸ்துங், சிபி, நுஷ்கி, கரான், பன்ஜ்கூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பிஎல்ஏவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த கிளர்ச்சிப் படைக்கு பலுசிஸ்தான் இளைஞர்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. பெண்களும் பிஎல்ஏ படையில் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தலிபான்கள், பிஎல்ஏ கூட்டணி பாகிஸ்தான் ராணுவத்துக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.