உலகம்

அமெரிக்காவில் காணாமல் போன பெங்களூரு மாணவர் சடலமாக மீட்பு

வெற்றி மயிலோன்

வாஷிங்டன்: சான் பிரான்சிஸ்கோவில் ஆறு நாட்களுக்கு முன்பு காணாமல் போன கர்நாடக மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா(22) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யாவின் உடல் மீட்கப்பட்டதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

          

எங்கள் தூதரக அதிகாரிகள் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் நேரடி தொடர்பில் உள்ளனர். மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறைகள் மற்றும் சேவைகளில் அதிகாரிகள் உதவி செய்வார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழல் குறித்து தூதரகம் தனது அறிக்கையில் கருத்து தெரிவிக்கவில்லை.

சாகேத்தின் நண்பர் ஒருவர், பெர்க்லி ஹில்ஸ் அருகே உள்ள அன்சா ஏரியில் அவர் இறந்து கிடந்ததாக லிங்க்ட்இனில் குறிப்பிட்டுள்ளார். சாகேத், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அவர் இப்பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 2025 முதல் அறிவியல் முதுகலை படித்து வருகிறார்.

சாகேத் பிப்ரவரி 9 முதல் காணாமல் போனார். அவரது பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி அடங்கிய பை, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சாகேத் கடைசியாக டுவைட் வேயின் 1700 தொகுதியில் உள்ள அன்சா ஏரியின் அருகே நடமாடியதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

சாகேத் சென்னை ஐஐடியில் வேதியியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். "ஹைப்பர்லூப்பிற்கான மைக்ரோசேனல் கூலிங் சிஸ்டம்" கண்டுபிடிப்பதற்கான காப்புரிமையை அவர் வைத்திருக்கிறார். 2025ல் ஐஐடியில் பட்டம் பெற்ற அவர், சில மாதங்களுக்குப் முன்பிலிருந்து கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

SCROLL FOR NEXT