ஜெனீவா: லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா போன்ற தங்களின் ஆதரவு அமைப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஈரான் மீது மீண்டும் மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு, “அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “லெபனானில் உள்ள தங்களின் அதிக ஊதியம் பெறும் ஆதரவு அமைப்புகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதையும், பிரச்சனைகளை உருவாக்குவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி அவர்கள் நிறுத்தவில்லை என்றால், கடந்த வாரம் நாங்கள் நடத்தியதை விட இன்னும் பல மடங்கு கொடூரமான தாக்குதலை ஈரான் மீது நடத்துவோம்” என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் “அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று ஈரானின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த பதிவை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து ஈரான் தூதரக குழுவினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தற்காலிகமாக வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டால் மட்டுமே, அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்போம் என்றும் ஈரான் குழுவினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த மிரட்டல் போக்கு நீடித்தால், தங்களின் ஆயுதப் படைகள் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பு அறிவித்துள்ளது அமைதி பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.