வாஷிங்டன்: நம்பகமான நட்பு நாடுகளுடன் ஏஐ துறையில் ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க எட்டு நாடுகள் அடங்கிய ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. ஆனால், இதில் இந்தியாவுக்கு இடமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாக்ஸ் சிலிக்கா என்பது புதிய வகையான சர்வதேச கூட்டமைப்பு. புதிய செயற்கை நுண்ணறிவு யுகத்தின் பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள எட்டு நாடுகள், அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம்பகமான நட்பு நாடுகளுடன் ஆழமான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா தலைமையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
சிலிக்கான் நகரத்துக்கு தேவையான தடையில்லாத விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டாய சார்புகளை குறைத்தல், செயற்கை நுண்ணறிவுக்கு (ஏஐ) அடிப்படையான பொருட்கள் மற்றும் திறன்களை பாதுகாத்தல் ஆகியவற்றை இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் உறுதி செய்யும். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான், ஆஸ்திரேலியா.. இருப்பினும், அமெரிக்கா உருவாக்கியுள்ள இந்த புதிய ஏஐ கூட்டமைப்பில் நெருங்கிய நட்பு நாடாக கருதப்படும் இந்தியாவுக்கு இடமளிக்கப்படவில்லை. இந்தியாவைத் தவிர, குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை இந்த புதிய முன்னெடுப்பான பாக்ஸ் சிலிக்கான் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.