பால் தினகரன் 
உலகம்

வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம் செய்ய முயன்றதாக இலங்கையில் பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல்

செய்திப்பிரிவு

யாழ்ப்பாணம்: இயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்) என்ற அமைப்பை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு வந்தார். அவருடன் ஜீசஸ் கால்ஸ் குழுவும் வந்தது.

3 நாட்களுக்கு பிரச்சாரக் கூட்டம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் தொட்டம் பகுதிகளில் கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜீசஸ் கால்ஸ் குழுவினர் துண்டுப் பிரசுரங்களை பகிரங்கமாக விநியோகித்துள்ளனர்.

இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சிவசேனா அமைப்பு கடும்எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ள பால் தினகரன், இங்கு மதப் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது என்று போலீஸ் டிஐஜி.யிடமும் மக்களிடமும் சிவசேனா அமைப்பினர் எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து மணிபே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இந்துக்கள், யாழ்ப்பாண போலீஸ் டிஐஜி.க்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்தடைந்த பால் தினகரன் மற்றும் அவருடைய குழுவினரை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்லவும் அனுமதி மறுத்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து ஓட்டலில் தங்க மட்டும் அனுமதி அளித்தனர்.

மேலும், மதப் பிரச்சாரத்தில்ஈடுபடகூடாது என்று எச்சரித்து அனுப்பினர். யாழ்ப்பாணம் வருவதற்கு முன்னதாக கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளில் பால் தினகரன் குழுவினர் மதப் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT