துருக்கியில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, துருக்கியில் ரஷ்ய தூதர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து துருக்கி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனடோலு செய்தி நிறுவனம் , "அமெரிக்க தூதரக அலுவகம் அருகே ஆடைக்குள் சிறு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த நபர் வானில் 8 முறை சுட்டார். பின் அந்த நபரை பாதுகாப்புப் பணியாளர்கள் மடக்கி பிடித்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என துருக்கி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தூதர் கொல்லப்பட்ட புகைப்பட கண்காட்சி நடைபெற்ற இடத்தின் அருகேதான் அமெரிக்க தூதரக அலுவலகமும் இருக்கிறது.
ரஷ்யா, துருக்கி, ஈரான் நாடுகளின் உறவில் இடையூறு ஏற்படுத்தவே இந்தத் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது என துருக்கி, ரஷ்யா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை சிரியா தொடர்பாக துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்களின் முக்கிய சந்திப்பு நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.