ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளான விசாரணையில் தீவிரவாதிகள் மீது சந்தேகப் பார்வைக்கு இடம் தரவில்லை என அந்நாடு கூறியுள்ளது.
இது குறித்து ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் மக்சிம் சொகொலோவ் கூறும்போது, " ரஷ்ய ராணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமையன்று கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது, இது தொடர்பான விசாரணை தீவிரவாதிகள் மீது சந்தேகப் பார்வைக்கு இடம் தரவில்லை.
ராணுவ விமான விபத்து ஓட்டுநரின் கவனக் குறைபாடாகவோ அல்லது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில்தான் விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
அண்மையில் சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளின் தலைமையிடமான அலெப்போ நகரை ரஷ்ய உதவியுடன் அதிபர் ஆசாத் படை கைப்பற்றியது. எனவே இந்தப் புத்தாண்டை சிரியாவில் உற்சாகமாகக் கொண்டாட ரஷ்ய ராணுவம் திட்டமிட்டது.
இதற்காக ரஷ்ய ராணுவ இசைக் குழுவைச் சேர்ந்த 64 இசைக் கலைஞர்கள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 84 பேரை அழைத்துக் கொண்டு டியு-154 ராணுவ விமானம் ரஷ்யாவின் அட்லரில் இருந்து சிரியாவின் லடாகியா விமானப் படைத் தளத்துக்கு ஞாயிறு அதிகாலை புறப்பட்டது. இதில் விமானிகள் உட்பட 8 விமான ஊழியர்களும் இருந்தனர்.
கருங்கடலில் மாயம்
விமானம் புறப்பட்ட 20-வது நிமிடத்தில் கருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விமானம் மறைந்து விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கருங்கடல் பகுதிக்கு ரஷ்ய கடற்படையின் 10 போர்க்கப்பல்கள், 5 ஹெலிகாப்டர்கள், ஏராளமான ரோந்துப் படகுகள் மற்றும் ஆளில்லா விமானம், ஆளில்லா நீர்மூழ்கிகள் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.