உலகம்

கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: கடும் வெள்ள பாதிப்புக்கு பிறகு கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்துக்கு பிறகு அந்நாட்டின் 32 மாவட்டங்களில் மலேரியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிடமிருந்து 62 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதற்கான முடிவுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. வெள்ள பாதிப்புக்கு பிறகு கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறும்போது, “இந்தியாவிடம் இருந்து கொசு வலைகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். நவம்பர் மாத மத்தியில் இவை கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு பிறகு அந்நாட்டில் பரவிவரும் நோய்களால் இரண்டாவது பேரிடருக்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT