உக்ரைனில் தாக்குதலுக்கு உள்ளான கட்டிடம். 
உலகம்

உக்ரைனின் கீவ் நகரில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடும் தாக்குதல்: 11 பேர் பலி; பலர் படுகாயம்

செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களின் மீது ஏவுகணைகளைக் கொண்டு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 11 பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்ததுள்ளது. இதனிடையே, உக்ரைன் நகரங்கள் மீது பதிலடி தாக்குதல் தொடரும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

"போரில் இது ஒரு புதிய கட்டம்" என உக்ரைன் நாட்டு பத்திரிகையாளர் ஸ்விட்லானா மோரிநெட்ஸ் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சுமார் 3 மணி நேரத்திற்கு முன்னர் உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது. சுமார் 60 நிமிடங்களுக்கு முன்னர் வானில் இருந்து சைரன் ஒலி மீண்டும் கேட்டதாக தகவல்.

ரஷ்யாவின் ஈவு இரக்கமற்ற இந்த ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி சுமார் 11 பேர் உயரிழந்துள்ளதாக உக்ரைன் நாட்டு அவசரகால சேவை அமைப்பு டெலிகிராம் மூலம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாட்டின் ஒரு பகுதியில் மின்சார சிக்கனம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது பாரபட்சமின்றி நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதல் போர்க் குற்றத்தின் உச்சம் என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மிசெல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்றைய தாக்குதல் குறித்து கீவ் நகரின் அவசரகால சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். லிவி, டெர்னோபில், க்மெல்னிட்ஸ்கி, சைட்டோமிர், க்ரோபிவ்னிட்ஸ்கி ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "உக்ரைன் முழுவதும் நடந்துள்ள குண்டுவெடிப்பால் பலர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கிரீமியா பாலம்: கிரீமியா தீபகற்ப பகுதியையும் ரஷ்யாவையும் இணைத்த கிரீமியா பாலத்தின் மீது கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி பாலத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. சரக்கு ரயிலின் 7 எரிபொருள் டேங்கர்கள் எரிந்து நாசமாகின.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய வட்டாரங்கள் கூறும்போது, “இதுவரை உக்ரைனின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தோம். ஆனால், உக்ரைன் ராணுவமோ தீவிரவாதிகளின் பாணியில் ரஷ்யாவின் பயணிகள் போக்குவரத்து பாலத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் பொது பயன்பாட்டுக்கான கட்டமைப்புகள் மீது தீவிரதாக்குதல் நடத்துவோம்" என்று தெரிவித்தன. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்க வில்லை.

நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களுக்கு இடையில் 7 மாதங்களுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது.

SCROLL FOR NEXT