உலகம்

புளோரிடாவை தாக்கிய சூறாவளி | வீதிக்கு வந்த சுறா; காற்றின் வேகத்தில் சிக்கிய செய்தியாளர் - வீடியோ

செய்திப்பிரிவு

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை அன்று இயன் என்ற சூறாவளி கரையைக் கடந்தது. அப்போது மோசமான சேதம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் சுறாக்கள் சில கடலில் இருந்து வீதிகளுக்கு அடித்து வரப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை தொகுத்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் காற்றின் வேகத்தில் சிக்கி சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த சூறாவளி கரையை கடந்தபோது பதிவான மழை மற்றும் காற்றின் வேகத்தை பிரதிபலிக்கும் வகையில் இணையவெளியில் சில வீடியோ காட்சிகள் வலம் வருகின்றன.

இந்தச் சூறாவளி தரையை கடந்தபோது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது. சுமார் 18 லட்சம் மக்கள் மின்சார வசதியின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் மின்சார வசதி பாதிப்பால் அவதியுற்றுள்ளனர்.

புளோரிடாவே வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் மருத்துவக் குழு மற்றும் 300 ஆம்பூலன்ஸ்களை அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது. மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மக்களுக்கு துணையாக தங்கள் அரசு இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT