வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர், வால்மார்ட் வர்த்தக கட்டிடத்தை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் மிசிஸிப்பி மாகாணத்தில் உள்ளது டுபேலா நகரம். அந்நகரிலுள்ள விமான நிலையத்தில் குட்டி விமானம் ஒன்று மர்ம நபரால் கடத்தப்பட்டது. கடத்திய நபர், வால்மார்ட் வர்த்தக கட்டிடத்தை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இந்த விமானக் கடத்தல் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பல மணி நேரம் காவல்துறையினர் விமானத்தை கடத்திய நபரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, விமானத்தை கீழே இறக்கச் செய்தனர். விமான கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தக் கடத்தல் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மிசிஸிப்பி மாகாண ஆளுநர் டேட் ரீவ்ஸ் கூறும்போது, “பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல்கொய்தா தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம், விமானத்தின் மூலம் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் சுமார் 3,000 வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ