உலகம்

மாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிப்பு: எகிப்து ராணுவம்

ஏபி

பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் பாகங்கள் மத்தியதரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி, எகிப்து நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தபோது திடீரென ரேடார் கண்களில் இருந்து மறைந்தது.

இதனால் பதட்டம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால், எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் பயணித்த 66 பேரும் பலியாகினர்.

இந்நிலையில் இந்த விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடமைகளில் ஒருசிலவும் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு 290 கிமீ தூரத்தில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT