பத்திரிகையாளர் மூஸா முகமதி 
உலகம்

'தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் நிலைமை' - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கன் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் உணவுப் பண்டங்களை விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் தான், ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், "தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறார். ஆப்கனில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

வைரல் புகைப்படத்தால் வந்த நன்மை: இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக, தேசிய வானொலி, தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் அகமதுல்லா வாசிக், மூஸா முகமதிக்கு வேலை தர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அகமதுல்லா வாசிக் தனது ட்விட்டர் பக்கத்தில், "மூஸா முகமதி தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார். அவரது நிலையை சமூகவலைதளம் மூலம் அறிந்து கொண்டோம். தேசிய வானொலி, தொலைக்காட்சித் தலைவர் என்ற முறையில் விதிகளுக்கு உட்பட்டு அவருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT