உலகம்

கரோனா பரவல்: 10 ஆயிரம் பேரை தனிமைப்படுத்திய வடகொரியா

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 10,000 பேரை வடகொரியா தனிமைப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குகூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஒமைக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது. சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கரோனா பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஆண்டு விழாவை முன்னிட்டு மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியது. இந்த அணிவகுப்பில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை.

இந்த நிலையில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒரு அங்கமாக வடகொரியாவில் சுமார் 10,000 பேர்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் குறித்து வடகொரிய பல்கலைகழக பேராசிரியர் யாங் மூ ஜின் கூறும்போது, “கரோனா வைரஸ் மூன்று வழிகளின் மூலமே வடகொரியாவுக்குள் நுழைந்திருக்க முடியும்.. ஒன்று ரயில்பாதை வழியாக , இரண்டாவது கடல் வாணிகம், மூன்றாவது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மூலம். இதன் மூலம் நான் கூறுவது வைரஸ் சீனாவிலிருந்தே பரவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT