வங்கதேசத்தின் ரங்பூர் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியாகினர், மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
புதன்கிழமை காலை உள்ளூர் நேரம் 11 மணியளவில் ரங்பூர்-தினஜ்பூர் நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினஜ்பூரிலிருந்து ரங்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, சில்ஹெட்டிலிருந்து தினஜ்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று தாராகஞ்ச் போலீஸ் அதிகாரி அப்துல் லதீப் கூறினார்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உலகிலேயே வங்கதேசத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 4,000-த்துக்கும் மேற்பட்டோர் அங்கு சாலை விபத்துகளில் பலியாகி வருகின்றனர்.
உலகச் சுகாதார அமைப்பின் தரவுகளின் படி சாலை விபத்துகள் அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2% நஷ்டம் ஏற்படுத்தி வருகிறது. அதாவது சாலை விபத்துகளினால் அந்நாட்டுக்கு 1.2 பில்லியன் பவுண்டு தொகை இழப்பு ஏற்படுகிறது.