ரஷ்ய படைகளால் தாக்குதலுக்குள்ளான உக்ரைன் நகரம். 
உலகம்

80+ மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது ரஷ்ய படையினர் குண்டு வீசி தாக்குதல்: உக்ரைன் தகவல்

செய்திப்பிரிவு

மரியுபோல்: மரியுபோல் நகரில் 80-க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது ரஷ்ய படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய படைகளின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேற ரஷ்யா அனுமதி மறுக்கிறது என்று உக்ரைன் அரசும், மக்களை வெளியேற்ற உக்ரைன் தவறிவிட்டது என்று ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 17 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில், தலைநகர் கீவ், கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்த நிலையில், மரியுபோலில் நகரில் துருக்கிய குடிமக்கள் உள்ளிட் 80-க்கும் அதிகமான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி ஒன்றின் மீது ரஷ்ய படையினர் குண்டு வீசித்தாக்கியுள்ளதாக உக்ரைன் அரசின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாராவது கொல்லப்பட்டார்களா, எத்தனை பேர் காமடைந்தார்கள் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையில், ரஷ்யா படைகள் பொதுமக்கள் மீது எந்த வித தாக்குதலும் நடத்தவில்லை என அந்நாட்டு அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT