வெள்ளெலிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் சுமார் 2,000 எலிகளை கொல்ல ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.
ஹாங்காங்கில் செல்லப் பிராணி கடை ஒன்றில் வெள்ளெலிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தக் கடையின் உரிமையாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். கரோனா தொற்று ஏற்பட்ட எலிகளை ஏராளமான வாடிகையாளர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அக்கடையிலிருந்து எலிகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி 7-ஆம் தேதிக்குப் பிறகே அந்தக் கடையிலிருக்கும் எலிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் 2,000 வெள்ளெலிகளை கொல்ல ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது. ஹாங்காங்கில் செயல்படும் பிற செல்ல பிராணி கடைகளில் சில நாட்களுக்கு விற்பனைகள் நடக்கக் கூடாது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரச் செயலாளர் சோபிடா சான் கூறும்போது, “இந்த எலிகள் மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவுகிறதா என்று இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவுமா? - விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கரோனா பரவுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகள் கரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் அவை குறைந்த அளவு வைரஸ் தாக்கத்தையே பெறுகின்றன. அவ்வாறு இருக்கும்போது அவற்றால் நோய்க் கிருமியை மற்ற உயிரிகளுக்கு கடத்துவது கடினம் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.