பூடான் பயணத்தில் பிரதமர் மோடி | கோப்புப்படம் 
உலகம்

பிரதமர் மோடிக்கு பூடான் அரசின் மிக உயர்ந்த விருது

ஏஎன்ஐ

திம்பு: பிரதமர் மோடிக்கு பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பூடான் நாட்டின் தேசிய நாளான இன்று பிரதமர் மோடிக்கு இந்த விருதை பூடான் பிரதமர் லோடே ஷெரிங் அறிவித்தார்.

இது தொடர்பாக பூடான் பிரதமர் லோடே ஷெரிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ பூடான் நாட்டின் மிக உயரிய விருதான நாடாக் பெல் கி கோர்லா விருதுக்கு பிரதமர் மோடிக்கு வழங்குவது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்ஜெல் வாங்சக் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்தில், “ இந்த விருதுக்கு மோடி மிகத் தகுதியானவர். பூடான் தேசத்துக்கு மக்களின் சார்பாக வாழ்த்துகள். கரோன காலம் மட்டுமல்லாமல் அதற்கு முன்பு பல ஆண்டுகளாக மோடிஜியுடன் நிபந்தனையற்ற நட்புறவை பூடான் அரசு வைத்துள்ளது. அனைத்து விதமான உரையாடல்களிலும், பேச்சுகளிலும் அவரின் திறமை, அனுபவம் சிறப்பானது. ஆன்மிக எண்ணம் கொண்டவர் பிரதமர் மோடி. அவரை நேரில் கவுரவிக்க ஆவலாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து அண்டை நாடான பூடானுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து இந்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பூடானுக்கு 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு பூடான் பிரதமர் லோடே ஷெரிங் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT