உலகம்

வேகமெடுக்கும் கரோனா: சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு நகருக்கு முழு ஊரடங்கு

செய்திப்பிரிவு

ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யாவிலும் கரோனா வேகமெடுத்து வரும் சூழலில் சீனாவிலும் ஆங்காங்கே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

ஏற்கெனவே லான்ஸோ நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரின் மக்கள் தொகை 40 லட்சம். அதேபோல் மங்கோலிய பிராந்தியத்தில் உள்ள ஏஜின் நகரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை சீனாவின் ஹெயிலோக்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்ஹே நகரமும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 60 லட்சம். இந்த மாகாணம் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர். 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்தும் தொற்று இந்த குறிப்பிட்ட மாகாணத்துக்குப் பரவியிருக்கலாம் என சீனா அஞ்சுகிறது. இந்த மாகாணம் முழுவதும் பாதிக்கப்பட்டோருடன் தொடர்ப்பில் இருந்த 16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT