ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தலைமையில் ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
10 நாடுகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை பிற நாடுகள் வெளிப்படுத்தின. இதில் இந்தியாவும் ஒன்று.
இந்த பேச்சு வார்த்தையில், இந்தியா மற்றும் தலிபான்கள் பிரதிநிதிகள் முதல்முதலாக நேருக்கு சந்தித்தனர்.
இந்திய பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா கூறும்போது, “பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் ஆப்கானிஸ்தான் மனிதாபிமான நெருக்கடியில் இருப்பதால் உதவிகளை அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்” என்று தெரிவித்தார்.
பின்னணி
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.