உலகம்

ஆப்கனில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்: ஐ.நா.

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதிவரை பக்லான் மற்றும் குண்டுஸ் மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருட்கள் தரப்பட்டன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. எனினும் மருத்துவப் பொருட்கள் வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருப்பதால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT