ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஜெர்மனியை 16 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
கடந்த 16 வருடங்களாக ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்தக் கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்க்கல் தொடர்ந்து ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தார். இதன் மூலம் உலக நாடுகளிடையே செல்வாக்குமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு திங்கட்கிழமை அதன் முடிவுகள் வெளியாகின. இதன் முடிவில் சமூக ஜனநாயகக் கட்சி 25.7% வாக்குகளைப் பெற்றது. ஏஞ்சலா மெர்க்கல் தலைவராக உள்ள ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி 24.1% வாக்குகளைப் பெற்றது. கிரின்ஸ் கட்சி 14.8% வாக்குகளைப் பெற்றுள்ளது. சுதந்திர ஜனநாயகக் கட்சி 11.5% வாக்குகளைப் பெற்றது.
தற்போதையை நிலவரப்படி பெரும்பான்மை இல்லை என்றாலும், சமூக ஜனநாயகக் கட்சியே அதிக இடங்களை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று விரைவில் தங்கள் வெற்றியை அறிவிக்க ஜனநாயகக் கட்சி ஆயத்தமாகி வருகிறது.
மேலும், ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாப் ஷோல்ஸ் தங்களுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளதால் விரைவில் ஆட்சி அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி இதை ஏற்கவில்லை. கூடுதல் இடங்களைப் பிடித்த கட்சி ஆட்சியமைக்க அதிகாரம் கொண்டது என்று அர்த்தமில்லை. கூட்டணி அமைப்பதுதான் முக்கியம் என்று அக்கட்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளது.