அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தற்போது உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின், அவரை தற்போது தான் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார்.
இந்த ஆண்டின் பொது சபை விவாதத்தின் கருப்பொருள், கரோனாவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் வலிமையை உருவாக்குதல், தொடர்ந்து புனரமைத்தல், உலக தேவைகளை பூர்த்தி செய்தல், மக்களின் உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை புத்துயிர் பெறுதல்' என்பதாகும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றியபோது இந்தியாவை இந்து அரசு என்று அழைத்தார். முஸ்லீம்களுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக கூறினார். இதற்கு மோடி தனது உரையில் பதிலடி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.