ஆப்கானிஸ்தானிலிருந்து சுமார் 1,24,000 பேர் (ஆப்கன் பொதுமக்கள்) பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “ அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக சுமார் 1, 24,000 பேரை வான்வழியாக பாதுகாப்பாக இடம் பெயரச் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கடினமான காலத்தில் ராணுவ வீரர்கள், பிரதி நிதிகள் ஆகியோர் இந்த சாதனையை புரிந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி பரதார் துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார்.