சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலியாகினர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இட்லிப் பகுதியில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகினர். மாராயானில் உள்ள மருத்துவக் கட்டிடமும், குடியிருப்புப் பகுதிகளும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து சிரிய அரசுத் தரப்பில் பதிலளிக்கவில்லை.
சிரியா போர்
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தின.
இந்த நிலையில் தேர்தலில் பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றார். மேலும், இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேலைப் பொறுத்தவரை, மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவில் ராணுவ வீரர்களை மையமாகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.