ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் நிலை என்னவாகுமோ என்றொரு புறம் சர்வதேச சமூகம் அச்சம் தெரிவித்துக் கொண்டிருக்க அச்சமில்லை அச்சமில்லை என்ற தொனியில் ஆப்கன் வீதிகளில் பெண்கள் போராடக் கிளம்பியுள்ளனர்.
அந்த வரிசையில், ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்.
நேற்று அறிவிக்கப்பட்ட 33 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு ஒரே பெண்ணுக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தும் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த போராட்டத்தின் போது பெண் ஒருவர் தலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நெஞ்சை நிமிர்த்து நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் எடுத்துள்ளார். இது குறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஜாரா ரஹிமி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.
"தலிபான் துப்பாக்கி முனைக்குப் பயப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் ஆப்கன் பெண்" என்று அவர் எழுதி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இணையவாசிகள் பலரும் இந்தப் புகைப்படம் 1989ல் சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் ஜனநாயகப் போராளிகளை ஒடுக்க நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின் போது டாங்கர் வாகனத்தை எதிர்த்துச் சென்ற ஒற்றை மனிதனை நினைவுபடுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி பரதார் துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கிறார்.