ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றியதை தொடர்ந்து அங்கு ஒசாமா பின்லேடன் உருவாக்கிய அல்-கைதா தீவிரவாதிகளும், ஐ.எஸ்., லஷ்கர்-இ—தொய்பா, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளும் ஆப்கனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டினர் காபூல் விமான நிலையத்தில் திரண்டு வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றியதை தொடர்ந்து அங்கு ஒசாமா பின்லேடன் உருவாக்கிய அல்-கைதா தீவிரவாதிகளும், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளும் ஆப்கனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர். அதுபோலவே ஈராக்கில் செயல்பட்டு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஏராளமான அளவில் காபூல் நகருக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோலவே காஷ்மீரில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் லஷ்க்-இ.தோய்பா தீவிரவாதிகளும் நுழைந்து வருவதாக கூறப்படுகிறது.