சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டான் வெளியிட்ட செய்தியில், “சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் நன்ஜிங்கில் ஒரே நாளில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகப் பரவல் இப்பகுதிகளில் தொடங்கியுள்ளது. எனவே மாகாண அரசு, பெருந்திரளாகப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
சமீபத்தில் இப்பகுதியில் 90 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து இம்மாகாணத்தில் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.