கரிபீயன் தீவில் அமைந்துள்ள நாடு ஹைதி. இதன் அதிபர் ஜொவினெல் மொய்சே புதன்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தக் கொலையை 28 பேர் கொண்ட வெளிநாட்டுக் கூலிப்படை செய்துள்ளதாகவும், மொய்சே உடலில் 12 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் ஹைதி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் இருவர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் (இதில் ஒரு ராணுவ வீரரும் உள்ளார்) என்றும், 2 பேர் ஹைதி அமெரிக்கர்கள் என்றும், மீதமுள்ளவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கொலைக்குத் திட்டம் திட்டியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மொய்சேவைக் கொலை செய்ய என்ன காரணம் என்ற முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தப் படுகொலையில் காயம் அடைந்த அவரின் மனைவி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
யார் இந்த ஜொவினெல் மொய்சே?
ஹைதியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அந்நாடு பெரும் கலவரங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமையாலும் வேலையின்மையாலும் கடந்த பல ஆண்டுகளாக ஹைதி சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஹைதியின் அதிபராக ஜொவினெல் மொய்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கலவரம் காரணமாக, அதிகாரபூர்வமாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் மொய்சே ஹைதியின் அதிபராகப் பதிவியேற்றார்.
மொய்சேவின் பதவியேற்புக்குப் பிறகு நாட்டில் வறுமை, வேலையின்மை குறையவில்லை. மாறாக மொய்சேவுக்கு எதிராக நாளும் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
ஹைதி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொந்தளிப்புகளின் மையமாக மொய்ஸே கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தார்.
மேலும், நாட்டின் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இதன் காரணமாக அவருடைய பாதுகாப்புக்கும் அச்சம் நிலவியது.
மொய்சேவின் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், தான் 2017ஆம் ஆண்டுதான் பதவியேற்றதாகத் தெரிவித்து தனது பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தார் மொய்சே. இந்த நிலையில் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
1.1 கோடி மக்கள்தொகை கொண்ட ஹைதியில் 59%க்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.