கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு ஓமன் அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ஓமன் அரசு வெளியிட்ட அறிவிப்பு:
“கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரை இந்தத் தடை தொடரும்.
பயணிகள் விமானம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் விவரங்கள்:
பிரிட்டன், துனிசியா, லெபனான், ஈரான், இராக், லிபியா, புருனே, சிங்கப்பூர், இந்தோனேசியா, கினியா, கொலம்பியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், சூடான், தான்சானியா, தென் ஆப்பிரிக்கா, கானா, நைஜீரியா, கொலம்பியா, அர்ஜெண்டினா, சியரா லியோன், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்”.
இவ்வாறு ஓமன் அரசு தெரிவித்துள்ளது.
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,80,235 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,356 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் உலக நாடுகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம் அலைகளை ஏற்படுத்தி வருகிறது. உருமாற்றத்தைத் தடுப்பதற்குத் தடுப்பூசியே தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டமான பகுதிகளைத் தவிர்த்தல் போன்றவற்றைப் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளிலேயே இருந்தாலும், வெளிச்சமும் காற்றும் போதுமான அளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.