உலகம்

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்கக்கூடாது: அமெரிக்க செனட்டர் போர்க்கொடி

பிடிஐ

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்கக்கூடாது என்று அமெரிக்க செனட்டர் போப் கார்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிநவீன எப்-16 ரகத்தைச் சேர்ந்த 8 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதற்கு கடந்த அக்டோபரில் அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது.

ஆனால் கடந்த ஜனவரியில் இந்தியாவின் பதான்கோட் விமானப்படைத் தளம் மீது பாகி்ஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அண்மையில் நடந்த அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எப்16 விமானங்களை வழங்க பெரும்பான்மையான எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேரந்த டென்னிஸி செனட்டர் போப் கார்கர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தலிபான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் விளங்குகிறது. அந்த நாட்டின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு இரட்டை நிலையைக் கொண்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்க வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். எனவே பாகிஸ்தானுக்கு எப்16 ரக போர் விமானங்களை வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எப்16 போர்விமானங்களை வாங்குவது குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் சிறப்பு குழு வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

          
SCROLL FOR NEXT