உலகம்

கரோனா தொற்று குறைந்தது; துருக்கியில் தளர்வுகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

துருக்கியில் கரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. ஞாயிறு ஊரடங்கு நீக்கப்படுகிறது. திருமணங்கள், உணவு விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. ஆனால் சமூக இடைவெளிகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று வலியுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நாட்டுத் தயாரிப்பில் கரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் துருக்கி அரசு உள்நாட்டில் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசிக்கு ’துர்கோவாக்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

துருக்கியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் அங்கு கரோனா தொற்று குறைந்துள்ளது. துருக்கியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறன. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

SCROLL FOR NEXT