உலகம்

காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

செய்திப்பிரிவு

போர் நிறுத்த உடன்படிக்கைகளுக்கு இடையே காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “காசா பகுதியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பலியானவர்களின் விவரம் இதுவரை கண்டறியப்படவில்லை. மே 21ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேலால் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக, மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஐ.நா. முன்னெடுப்பில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் அமைதி நிலவியது.

இந்த நிலையில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் 14ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் புதிய அரசு பதவியேற்ற சில நாட்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.

          
SCROLL FOR NEXT