உலகம்

பாதை மாறி நகருக்குள் நுழைந்த யானைக் கூட்டம்: வனத்துக்கு செல்லும் வழியில் கும்பலாக தூக்கம்; வைரலாகும் புகைப்படம்

செய்திப்பிரிவு

சீனாவில் தனது வசிப்பிடத்திலிருந்து பாதை மாறி நகருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் ஒன்று சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கிறது.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த 3ம் தேதி 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. வழக்கமாக வலசை வரும் பாதையை மறந்து அவை ஊருக்குள் புகுந்துவிட்டதாகத் தெரிகிறது. இயற்கையான சரணாலயமாக இருந்த இடத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் புறப்பட்ட இந்த யானைக் கூட்டம் 500 கி.மீ பயணித்து கடந்த 3ம் தேதி நகருக்குள் வந்துள்ளது.

யுனான் மாகாணத்தின் வனப்பகுதியை ஒட்டி கும்மிங் எனும் இடம் உள்ளது. இது மக்கள் தொகை நிறைந்த பகுதி இதனால், அப்பகுதிக்குள் யானைகள் புகுந்துவிடாமல் தடுக்க யானைகளை வனத்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவற்றை பத்திரமாக வனத்துக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையில், சீனா அரசு தொலைக்காட்சி ஒன்று யானைகள் வனத்துக்குள் அனுப்பப்படும் நிகழ்வை 24 மணி நேர நேரலையாக வழங்கி வருகிறது. இது சீன மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வனத்துக்குள் செல்லும் வழியில் 15 யானைகளும் அழகாகப் படுத்து உறங்கும் காட்சி ஒன்று உலகளவில் பிரபலமாகியிருக்கிறது.
குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் போட்டுக்கொண்டு பெரிய யானைகள் சூழ்ந்து படுத்து உறங்கும் காட்சி மக்களை வெகுவாகக் குறைந்து வருகிறது.

யானைகள் பாதுகாப்பை உறுதி செய்துவரும் சீன அரசு மக்களின் பாதுகாப்பையும் கருதி யானைகள் செல்லும் வழியிலிருந்து 400 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது.

யானைகளை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு வனத்துறையினர் பெரிய வாகனங்களில் பின் தொடர்ந்தனர். யானைகள் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் இருக்க, வழியில் ஆங்காங்கே தொட்டி அமைத்து உணவும், தண்ணீரும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை யானைகளுக்கு 2 டன் உணவு வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் வழியில் யானைகள் சிற்சில சேதங்களையும் ஏற்படுத்தாமல் இல்லை.

SCROLL FOR NEXT