மலேசியாவில் கரோனா தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய சுகாதாரத் துறை தரப்பில், “மலேசியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்புகளில் குழந்தைகளும் அடக்கம். இம்முறை கரோனாவுக்கு குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,209 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.103 பேர் பலியாகினர்.
மலேசியாவில் இதுவரை 5,95,374 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 5% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.