யூத எதிர்ப்புப் பேச்சுகளை துருக்கி அதிபர் எர்டோகன் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அதன் தலைவர்கள் யூத எதிர்ப்புப் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இப்பேச்சுகள் மேலும் வன்முறையைத் தூண்டும். எனவே, இம்மாதிரியான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.
முன்னதாக துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விமர்சித்தார். அப்போது எர்டோகன் கூறுகையில், ''இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்துள்ளதைக் கேள்விப்பட்டேன். பாலஸ்தீனிய பிரதேசங்கள் துன்பம். ரத்தத்தால் துடிக்கின்றன. நீங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். நீங்கள்தான் இதனை என்னைச் சொல்ல வற்புறுத்தியுள்ளீர்கள். நாங்கள் இனி அமைதியாக இருக்கப் போவதில்லை. ரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று பைடனை விமர்சித்தார்.
இந்த நிலையில் யூத எதிர்ப்புப் பேச்சுகளை துருக்கி அதிபர் எர்டோகன் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களும், யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.