கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் கடந்த ஒரு வாரத்தில் தொற்று 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் உலக அளவில் தொற்று சதவீதத்தில் இந்தியாதான் இன்னும் முதலிடத்தில் இருக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கான கரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு கடந்த 16ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''உலக அளவில் கடந்த ஒரு வாரத்தில் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 86 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் பாதிப்பு 12 சதவீதமும், உயிரிழப்பில் 5 சதவீதமும் குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த வாரத்தில் புதிதாக 23 லட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு என்பது 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும்.
உலக நாடுகளில் கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 13% குறைந்துள்ளது. ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாதிப்பின் அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தோடு ஒப்பிட்டால், பிரேசிலில் 4.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் (3% அதிகம்). அமெரிக்காவில் 2.35 லட்சம் பேர் (21% அதிகம்), அர்ஜென்டினாவில் 1.51 லட்சம் பேர் (8% அதிகம்), கொலம்பியாவில் 1.15 லட்சம் பேர் ( 6% அதிகம்) பாதிக்கப்பட்டனர்.
உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவில் 27,992 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு புதிதாக 2 பேர் உயிரிழக்கின்றனர். இது 4% அதிகமாகும்.
நேபாளத்தில் 1,224 பேர் உயிரிழப்பு (266% அதிகம்), இந்தோனேசியாவில் 1,125 பேர் உயிரிழப்பு (5% அதிகம்).
கடந்த 9ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்குக் கிடைத்த இந்தியாவின் கரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபோது, அது அதற்கு முந்தைய வாரத்தைவிட பாதிப்பு 5 சதவீதம் அதிகமாக இருந்தது. அந்த வாரத்தில் மட்டும் 27.38 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
உலக அளவில் கடந்த 3 வாரங்களாக கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனாலும், சில நாடுகளில் மட்டும் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது, கரோனாவில், 2.54 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.83 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4ஆம் தேதி இந்தியாவில் கரோனா தொற்று 2 கோடியை எட்டிய நிலையில் அடுத்த 15 நாட்களில் 54 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது''.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.