உலகம்

சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தும் ரஷ்யா

செய்திப்பிரிவு

சிரியாவில் ராணுவ வசதிகளை விரிவுப்படுத்த இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ராணுவ தரப்பில் புதன்கிழமை கூறும்போது, “ சிரிய அரசின் பாதுகாப்பு படைகளுடன் ரஷ்ய படைகள் இணைந்து தொடந்து பயணிக்கும். ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து சுமார் 228 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் ராணுவ வசதிகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன.” என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT