படம்: ட்விட்டர் உதவி 
உலகம்

காசா பகுதியில் பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே கடும் மோதல்

செய்திப்பிரிவு

காசா பகுதியில் இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் காசா பகுதியில் 35 பேரும், 5 பேர் இஸ்ரேலிலும் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “செவ்வாய்க்கிழமை இரவில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் 35 பேர் பலியாக, இஸ்ரேலின் டெல்அவிவ் பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர் இதில் 5 பேர் பலியாகினர்.

இஸ்ரேல் மீது 150-க்கும் அதிகமான ஏவுகணை செலுத்தப்பட்டதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு சனிக்கிழமை அன்று இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 குழந்தைகள் உட்பட 22 பாலஸ்தீனர்கள் பலியாகினர். செவ்வாய்க்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

1967-இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

SCROLL FOR NEXT