ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வலுவான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை பாலி மற்றும் மத்திய சுலவேசியின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நில அதிர்வுடன் தொடர்ந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வலுவாக நீடித்தது. இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பாலியிலிருந்து 46 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது.
அரசு அதிகாரிகளின் தகவல்படி, பாலி, சிகி, டோங்கலா மற்றும் டோஜோ உனா-உனா ஆகிய பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் நில அதிர்வுகள் காரணமாக சுனாமி குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா என்பது அடிக்கடி நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் சாதாரணமாக நிகழும் நாடாக உள்ளது. ஜூன் மாதத்தில் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, ஜூன் 8 அன்று பிலிப்பைன்ஸில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், சுலவேசி தீவில் உள்ள மமுஜு நகருக்கு அருகே ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர்.