உலகம்

29% பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சவுதி

செய்திப்பிரிவு

மக்கள்தொகையில் 29% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை தரப்பில், “1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் நாட்டின் 587 மையங்களுக்கு அனுப்பப்பட்டு போடப்பட்டு வருகின்றது. இதுவரை சவுதி மக்கள்தொகையில் 29% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினசரியாக 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சவுதியில் 1,346 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் இதுவரை 4,22,316 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT