கரோனாவைத் தடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “கரோனா பரவலைத் தடுப்பது குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த உரையாடலில் இரு நாட்டின் உற்பத்தி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய ஒப்பந்தங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் நாளும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால் அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தியாவைப் போல ஜப்பானில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.