இராக்கில் சன்னி தீவிரவாத படைகள், ராவா மற்றும் அனா என்ற இரு நகரங்கள் கைப்பற்றி, அந்நாட்டின் மேற்கு பகுதியை நோக்கி அவர்கள் முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இது அண்டை நாடுகளுக்கு அபாயகரமானது என அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
இராக்கின் பாக்தாத் நகரை நெருங்கும் வகையில், மேற்கு பகுதியின் ராவா மற்றும் அநா நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு உள்ளூர் தலைவர்கள் மற்றும் மக்கள் என 21 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இராக்கில் சன்னி பிரிவுக்கு ஆதரவாக ராணுவத்தை எதிர்த்துப் போராடி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவன்ட் தீவிரவாதிகள், கடந்த இரு வாரங்களாக இராக் ராணுவம் மீது தாக்குதல் நடத்தி பல நகரங்களை கைப்பற்றினர். இந்த நகரங்களிலிருந்து அரசின் ராணுவப்படைகள் வெளியேறி உள்ளனர்.
ராவாவிலிருந்து ராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். ராவா நகரத்தையொட்டிய யுப்ரடிஸ் நதியோரம் சிரியாவிற்கு செல்லும் வழியை அமைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை பாக்தாத் நோக்கி படையெடுத்த தீவிரவாதிகள் அல்- காய்ம் நகரை கைப்பற்றி, முன்னேறி சென்றதை அடுத்து, இ.எஸ்.இ.எல் அமைப்பு இராக் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் அல்லாமல் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்திருண்ட்தார்.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, இராக்கில் வரும் ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அங்கு ஷியா மற்றும் சன்னி பிரிவினர்களின் ஒருங்கிணைந்த தலைமை அமைய, அந்நாட்டு தலைவர்கள் வழிவகுத்து உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க அரபு நாடுகள் அனைத்தும் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.