இந்தியாவைச் சேர்ந்தவர் பாவனா. இவரது கணவர் அமன். இருவரும் கனடாவின் ஓட்டாவாவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கனடாவில் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர்.
அப்போது பாவனா கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்கு குடியுரிமை பெறலாம் என்ற எண்ணத்தில் குழந்தைக்கு விண்ணப்பிக்கவில்லை. கணவன், மனைவிக்கு மட்டும் நிரந்தர குடியுரிமை கிடைத்தது.
2011 ஜூன் மாதம் பாவனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந் தைக்கு தாக்ஸ் என்று பெயரிட்டனர். ஆனால் குழந்தைக்கு குடியுரிமை பெறுவதில் சிக்கல் எழுந்தது. அவர்கள் முதலில் விண்ணப்பித்த போதே குழந்தை குறித்து குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமை துறை அதிகாரிகளின் கெடுபிடியால் குழந்தை தாக்ஸ் இந்தியாவில் உள்ள தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். குழந்தையை தன்னோடு சேர்த்து வைக்குமாறு 3 ஆண்டுகளாக பாவனா போராடி வந்தார்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு ஒட்டாவா நகரில் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று சிவப்பு அங்கி, தலையில் குல்லா அணிந்து மக்களிடம் அவர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். இதைத் தொடர்ந்து தாயுடன் குழந்தை சேர்ந்து வாழ அந்த நாட்டு அரசு நேற்றுமுன்தினம் தற்காலிக அனுமதி அளித்தது.