உலகம்

அலெக்ஸி நவால்னியின் உடல்நிலை மோசம்; மருத்துவமனையில் சிகிச்சை: வழக்கறிஞர் தகவல்

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸி நவால்னியின் வழக்கறிஞர் கூறும்போது, “கைதுக்கு எதிராக நவால்னி, பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது உடல்நிலை முன்னர் இருந்த நிலையைவிட மோசமாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது

இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT