உலகம்

ஒரு மில்லியன் டன் அளவிளான அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு: எதிர்ப்பும்; ஆதரவும்

ஏஎன்ஐ

ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை இப்போது பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் அங்குள்ள அணுக்கழிவுகளை சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அணுக்கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரை தற்போது கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு சர்வதேச அணு சக்தி முகமை (IAEA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து ஜப்பான நாட்டுப் பிரதமர் யோஷிஹிடே சுகா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியபோது, அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றுவது இன்றியாமத பணி. இது ஓரிரு நாளில் முடியக்கூடியது அல்ல. தசம கால பணி. அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும் என்றார்.

ஆனால் எதிர்க்கட்சியினரும், இயற்கை ஆர்வலர்களும், கிரீன்பீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டெப்கோ (TEPCO), நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, அணு உலை கழிவுகளை அகற்றுவது தொடர்பாக சில மோசமான வதந்திகள் பரவுகின்றன. அவற்றை நிச்சயமாக நாங்கள் கட்டுப்படுத்துவோம் என்று கூறினார்.

ஜப்பானின் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT