உலகம்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 11 பேர் பலி

செய்திப்பிரிவு

மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 11 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மரில் வடமேற்கு பகுதியில் ராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தூப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியது. இதில் போராட்டக்காரர்கள் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதில் ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. 300-க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டு குடிமக்களை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT