உலகம்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 38 பேர் பலி

செய்திப்பிரிவு

மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” மியான்மர் மாவட்டத்தில் யாங்கூன் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சீன தூதர அதிகாரிகள் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மியான்மர் போராட்டத்தில் 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். முன்னதாக, மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் பல இடங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT