உலகம்

காங்கோவில் மலை நிறைய தங்கம் தோண்டி எடுத்துச்சென்ற மக்கள்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

செய்திப்பிரிவு

மத்திய ஆப்பிரிக்க நாடான டி.ஆர். காங்கோவில், ஒரு மலையில் உள்ள மண்ணில் பெருமளவு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத் தாது மண்ணை தோண்டி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

டி.ஆர்.காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத் தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விவரம் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தெரியவரவே, மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட கிடைத்த ஆயுதங்களுடன் மலைப் பகுதிக்கு விரைந்து, போட்டி போட்டுக் கொண்டு தாது மண்ணை தோண்டினர். அதனை அலசி தங்கம் எடுப்பதற்காக பைகளில் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சியை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனிடையே இத்தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில்தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட் டனர். லுகிகி கிராமத்தில் உள்ள அந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. டி.ஆர். காங்கோவில் தாமிரம், வைரம், கோபால்ட் மற்றும் பிற தாதுக்களும் பெருமளவில் இருப்பதாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT