மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38 பேர் பலியான நிலையில் மியான்மர் நிலவரம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மரில் ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு எதிராக போராட்டக்காரர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை யாங்கூன் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது/
அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நேற்று மட்டும் 38 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.
என்ன நடக்கிறது மியன்மரில்?
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது